Monday 11 May 2015

விண்வெளியில் உள்ள புதன் கிரகத்தில் தற்போது இருக்கும் மின்காந்த புலத்தின் வயது சுமார் 400 கோடி ஆண்டுகள் என்று நாசாவின் 'மெஸெஞ்சர்' விண்கலம் மூலம் தெரிய வந்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் ஆகும். இந்த கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 2004ம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 'மெஸெஞ்சர்' எனும் ஒரு விண்கலத்தை ஏவியது.

2008ம் ஆண்டில் புதன் கிரகத்தை நோக்கிப் பயணித்த அந்த விண்கலம், 2011ம் ஆண்டு முதல் அந்த கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இருந்துகொண்டு தகவல்கள் வழங்கி வந்தது. பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அந்த கிரகத்துக்குள் நுழைந்த அந்த விண்கலம், மிகச் சமீபத்தில் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், இந்த விண்கலம் 2014ம் ஆண்டு இறுதி மற்றும் 2015ம் ஆண்டு ஆரம்பத்தில் பூமிக்கு அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அப்போது புதன் கிரகத்தில் உள்ள மின்காந்த வெளி சுமார் 370 கோடி அல்லது 390 கோடி ஆண்டுகளாக அங்கு இருந்து வருகிறது என்று அறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த கிரகத்தில் மின்காந்த வெளி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், அது எப்போது தோன்றியது என்பதை அறிந்திருக்கவில்லை.

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து புதன் கிரகத்தில் தான் இத்தகைய மின்காந்த வெளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் ஆரம்பத்தில் மின்காந்த வெளி இருந்திருந்தாலும் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும், பூமி உருவான அதே காலக்கட்டத்தில்தான் புதன் கிரகமும் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் புதன் கிரகம் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இது பற்றிய விவரங்கள் ‘சயன்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தூரில் நேற்று கூறியதாவது:
விவசாயிகள் பாதிப்படையாத வகையில் காங்கிரஸ் ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த முடியும்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 மே மாதம் பதவியேற்ற பிறகு இம்மசோதாவை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங் களைப் பறிக்க மசோதாவில் திருத்தங்களை செய்துள்ளது.
இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தரப்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுட னேயே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை கடந்த ஆண்டு பிறப்பித்தது. ஆனால் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால் மீண்டும் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவுடன் கலந்தோலாசித்த பிறகே நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி அரசு, விவசாயி களின் நலனுக்கு விரோதமான மசோதாவை நிறைவேற்ற முயற் சிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா | கோப்புப் படம்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார்.
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்தார். 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார்.
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டனர். இதற்கு கர்நாடக போலீஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்:
இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு பின்னணி:
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இதனிடையே நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய‌ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே-11) தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.